நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரம்பாடி உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் புல்லட் என அழைக்கப்படும் காட்டு யானை பல மாதங்களாக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வந்தது. கிராமங்களில் வீடுகளை சேதப்படுத்தி, மக்களை மிரட்டிய இந்த யானையை பிடிக்க கிராம மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகள் சீனிவாசன் மற்றும் விஜய் ஆகியவை உதவியுடன் வனத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பிடிக்கப்பட்ட புல்லட் யானையை வனத்துறை வாகனத்தில் ஏற்றி, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உலாந்தி வனச்சரகத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் ஒருங்கிணைந்து யானையின் உடல்நிலையை சோதனை செய்தனர்.
தற்போது யானையை அங்கு உள்ள கூண்டில் அடைத்து 15 நாட்கள் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. யானையின் உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்த பின், அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவது குறித்து வனத்துறை முடிவு எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.