
புதுச்சேரி மாநிலத்தின் மணவெளி தொகுதியில் உள்ள புதுகுப்பம் மீனவ கிராமத்தில் அமைந்த அரசு ஆரம்பப்பள்ளியின் மதில் சுவர் இடிந்து விழுந்து, மூன்று குழந்தைகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை அறிந்த பாமக மாநில அமைப்பாளர் கோ. கணபதி அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடம் பேசி அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.
அப்போது, அவர் தெரிவித்ததாவது:
“புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி கட்டிடங்கள் பத்திரமாக இருக்க வேண்டும். ஆசிரியர்களும், பள்ளி ஊழியர்களும் கட்டிடத்தின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பழுதாகிய கட்டிடங்கள் மற்றும் மதில் சுவர்களைப் பற்றிய தகவலை உடனடியாக அரசு அதிகாரிகளுக்குத் தெரிவித்து, அவற்றை சீக்கிரம் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, ஆபத்தான பள்ளிகளை அருகிலுள்ள பாதுகாப்பான பள்ளிகளில் இணைக்க அரசு முன்வர வேண்டும். இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.”
இந்த நிகழ்வில், பாமக தலைமை நிலையச் செயலாளர் சுப்ரமணி, நகர இளைஞர் சங்க மாநிலச் செயலாளர் பிரதீப், வன்னியர் சங்க மாநிலப் பொறுப்பாளர் மணிரத்தினம், நைனார் மண்டபம் எஸ்.ஜி. வேலு, தினேஷ் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், கிராம மக்கள் உடன் இருந்தனர்.