
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும்” என அவர் கூறியதற்கு, பாஜக துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த 4 ஆண்டுகள் முடிந்து, 5-ஆம் ஆண்டில் காலடி வைத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளன.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதை எதிர்கொள்ள அதிமுக, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி முயற்சி செய்தது. ஆனால், அவர் ஒத்துழைக்காததால் பாஜகவுடன் மீண்டும் இணைய முடிவெடுத்தது.
பாஜகவுடன் அதிமுக கூட்டணியைக் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு முறித்தது. ஆனால் பின்னர், எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அமித்ஷா சென்னை வந்து கூட்டணியை உறுதிப்படுத்தினார்.
இந்த கூட்டணியை அதிமுக மூத்த தலைவர்கள் வரவேற்றுள்ள நிலையில், சில இரண்டாம் கட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “இந்த முறை பாஜக எம்எல்ஏக்கள் அதிகமாக சட்டமன்றத்துக்கு செல்வார்கள். தேசிய ஜனநாயக ஆட்சி இபிஎஸ் தலைமையில் அமையும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும்” என்றார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த பாஜக துணைத் தலைவர் கேபி ராமலிங்கம், “பூ எப்போதும் மேலேதான் இருக்கும். இலை கீழேதான் இருக்கும். எனவே, இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்வது இயல்பான காட்சி. இது எண்ணிக்கையால் அல்ல, காட்சியால் பார்க்க வேண்டியது” என தெரிவித்தார்.
“தாமரை இரட்டை இலையை நசுக்கி மலருமா?” என்ற கேள்விக்கு, “அதைக் அமைச்சர் பொன்முடியிடம் கேளுங்கள்” என்ற பதிலளித்த அவர், “இலை மறைவு, காய்”…புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.