
தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டமான ‘நான் முதல்வன்’ மூலம் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன், ஒன்றிய அரசின் UPSC தேர்வில் மாநில அளவில் முதலிடத்தை பெற்றார். மேலும், அதே திட்டத்தில் பயிற்சி பெற்ற மோனிகா என்ற மாணவி 39வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த இந்தத் திட்டம், மாணவர்களின் நம்பிக்கை மற்றும் தைரியத்தை வளர்க்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தற்போது 50 பேர் UPSC தேர்வில் வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வெற்றியை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது X சமூக வலைதளத்தில்,
“நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்த நாளில் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் UPSC தேர்வில் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் திட்டம் வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும்” என பதிவிட்டுள்ளார்.
வெற்றிபெற்ற சிவச்சந்திரன் தனது பேட்டியில்,
“தனியார் பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் சுயமாக பயிற்சி எடுத்தபோது, ‘நான் முதல்வன்’ திட்டத்தில் சேர்ந்தேன். அந்த பயிற்சி எனக்கு மிகுந்த உதவியாக இருந்தது. இதை உருவாக்கிய முதலமைச்சருக்கு நன்றி” என்று தெரிவித்தார்.