
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டை அரசுப் பல்கலைக்கழகங்கள் புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு மாற்றப்பட்ட பின்னணியில் இந்த மாநாடு நடைபெறுவதால், இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் உதகையில் நடைபெறும் இந்த மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில் தமிழகத்தின் 19 அரசுப் பல்கலைக்கழகங்கள், 9 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 3 மத்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அரசுப் பல்கலைக்கழகங்கள் மாநாட்டை புறக்கணித்துள்ளன. அதில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகரர் மாநாட்டில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 41 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 9 பேரே பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மத்திய மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாடு, துணைவேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருந்து தமிழக முதலமைச்சருக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்றது. சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதப்படுத்தியதையடுத்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, அது தொடர்பாக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அண்ணாமலை, பாரதிதாசன், சென்னை, மதுரை காமராசர், பாரதியார், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பதவி காலியாக உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளே இதற்குக் காரணமாகத் தெரிவிக்கப்படுகிறது.
—