
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.
விழாவின் ஒரு பகுதியாக சாமி திருக்கல்யாணம் நடைபெற இருந்தது. இதற்கான சீர் வரிசை பொருட்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது, பட்டாசுகள் வெடிக்கவிடப்பட்டன. அதற்கிடையே, ஒரு பைக்கில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசு மூட்டையில் தீப்பொறி விழுந்ததால், அதில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.
இந்த திடீர் சம்பவத்தில் செல்வராஜ் (வயது 29), தமிழ்செல்வன் (வயது 11), கார்த்தி (வயது 11) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலரும் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.