
கோவை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பவன்குமார் ஜி கிரியப்பனவர் பதவியேற்றுள்ளார். கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த அவர், பெங்களூரில் உள்ள PES பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றவர்.
2016 ஆம் ஆண்டில் தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அவர் இதற்கு முன் திருவள்ளூர், நாகர்கோவில், தாராபுரம், கடலூர், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில் அரசு இணைச் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, தற்போது தமிழ்நாடு திறந்த மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.