
புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான ரவுடி சத்யாவின் காதலி உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை வழக்கின் பின்னணி கடந்த 14ஆம் தேதி, புதுச்சேரி ரெயின்போ நகர் ஏழாவது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில், மூன்று வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். விசாரணையில், கொல்லப்பட்டவர்கள் பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரஸி, தீடிர் நகரைச் சேர்ந்த தேவா, மற்றும் மூலகுளம் பகுதியைச் சேர்ந்த ஆதி என போலீசாருக்கு தெரியவந்தது. கொலை நடந்ததற்குப் பின்னர், சம்பந்தப்பட்ட மூவரின் உடல்களை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், இந்த கொலைகள், ரவுடி சத்யாவை அவரது எதிரியான முதலியார்பேட்டை விக்கியுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டதால் நடந்ததாக போலீசார் கண்டறிந்தனர். இதற்கான முக்கிய ஆதாரங்களை பெற்று, போலீசார் ரவுடி சத்யா, ஒரு சிறுவர் உட்பட 10 பேரை கைது செய்தனர். இதில் 9 பேர் சிறையில் அடைக்கப்பட்டு, சிறுவர் ஒரு சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
காதலி உட்பட மூவரை கைது செய்த
போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டனர் , இதில் தொடர்புடைய மேலும் சிலர் இருப்பதாக சந்தேகித்தனர். அதன்படி, ரவுடி சத்யாவின் காதலி, டாட்டூ நிபுணர் சுமித்ரா (24), மற்றும் கொலையில் உடந்தையாக இருந்த ஆபிரகாம், ஹரிஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
காதலர் தினத்தன்று, ரவுடி சத்யா, சுமித்ராவுடன் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சுற்றி வந்ததாக தகவல் கிடைத்தது. அப்போது, சத்யாவை நோட்டமிட்டு, கொலை செய்ய திட்டமிட்ட வாலிபர்களை, அவருடைய கூட்டாளிகள் கத்தி முனையில் கடத்திச் சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.
கொலைக்குப் பின், ஜீ பே மூலமாக சுமித்ரா, சத்யாவிற்கு ₹5,000 பணம் அனுப்பியதும் போலீசாரின் விசாரணையில் உறுதியாகியது. இதனை அடிப்படையாகக் கொண்டு, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
குறிப்பாக, கைது செய்யப்பட்ட சுமித்ரா தற்போது இரண்டு மாத கர்பினியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.