சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி புதுச்சேரியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கான சாட்சி இந்த சம்பவம். இச்சம்பவத்தில் காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டம் சமூக வலைதளங்களிலும் பெரும் கவனம் பெற்றுள்ளது. பலரும் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.