
கோவையில் ரோட்டரி கிளப் மில்லினியம் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்திய ராணுவ அக்னி வீர் திட்டத்திற்கான விண்ணப்பங்களும் எடுக்கப்பட்டது, அதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

ரோட்டரி கிளப் மில்லினியம் தனது 25 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கோவையின் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இந்த வேலை வாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்தது. ரோட்டரி கிளப் மில்லினியத்தின் தலைவர் சந்தானகுமார் மற்றும் நிர்வாகிகள் செபாஸ்டியன், டேவிட், ராஜேஷ்குமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்த முகாம் நடைபெற்றது.
முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்புவரை உள்ள கல்வித் தகுதியுடன் 2000 இளைஞர்கள் கலந்து கொண்டனர். கோவை மற்றும் பிற பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் சுயதொழில், ஆட்டோமொபைல், சாப்ட்வேர், மற்றும் டெக்ஸ்டைல் நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்றன.
இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட அக்னி வீர் திட்டத்தில் ஆள் சேர்க்கும் அரங்கும் அமைக்கப்பட்டது, அதில் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் பதிவு செய்து, ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டினர்.

