
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை எஸ்.பி.ஐ வங்கியில், 116 கிராம் போலி தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற முயன்ற இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை எஸ்.பி.ஐ வங்கியின் மேலாளராக பணியாற்றி வருபவர் ஜான்சி ராணி. நேற்று, மானாமதுரை பகுதியைச் சேர்ந்த கோட்டையம்மாள், மதுரையைச் சேர்ந்த ஜனார்த்தன், மற்றும் மடபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரி ஆகிய மூவரும் வங்கிக்கு வந்து, 116.7 கிராம் நிறையுடைய இரண்டு தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற முயன்றுள்ளனர்.
ஆனால், நகைகளை பார்த்ததும் சந்தேகம் கொண்ட மேலாளர், மதிப்பீட்டாளரிடம் சோதனைக்காக ஒப்படைத்தார். அதில், நகைகள் போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து மேலாளர் மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, மூவரும் முரண்பட்ட பதில்கள் அளித்ததால், அவர்கள் போலி நகை மூலம் மோசடி செய்ய முயன்றது உறுதி செய்யப்பட்டது. இதன் பேரில் காவல்துறையினர் அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.