
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே அமைந்துள்ள ஒரு பிரபல தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் இன்று அதிகாலை பயங்கர கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
கீரப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் (27) என்பவர், கல்லூரியில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு அவர் கல்லூரி வளாகத்திலேயே தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை மர்மநபர்கள் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து, மணிகண்டனை சுற்றிவளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்நிலையில், கொலையில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதற்கான விடைகள் இன்னும் கிடைக்கவில்லை.
கல்லூரி வளாகத்துக்குள் ஏற்பட்ட இந்த கொலை சம்பவம் மாணவர்களிடையே மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் இது தொடர்பாக பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.