
புதுச்சேரி நீதிமன்ற வாயலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை திருடிய மெக்கானிக்கை சிசிடிவி காட்சிகளின் மூலம் கண்டுபிடித்து, போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி நைனார்மண்டபம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜ், தனது டிராக்டரை பயன்படுத்தி விவசாய நிலங்களுக்கு உரம் விநியோகிக்கும் தொழில்முனைவோராக பணியாற்றி வருகிறார். கடந்த 18ஆம் தேதி மாலை, இவர் தனது டிராக்டரில் உரம் ஏற்றிச் சென்று, புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் காலை 3:30 மணியளவில், டிராக்டரை எடுக்கச் சென்றபோது அது மாயமாகி இருப்பதை கண்டுபிடித்தார். இதை தொடர்ந்து, அவர் உருளையாண்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒரு இளைஞர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக டிராக்டருடன் சென்று கொண்டிருந்தது பதிவாகியது. இதன் அடிப்படையில், விழுப்புரத்தில் டிராக்டருடன் இருந்த வாலிபரை கைது செய்து, புதுச்சேரிக்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். குற்றவாளி, மயிலாடுதுறை மாவட்டம் புதுபட்டினத்தை சேர்ந்த 29 வயதுடைய வரதராஜன் என்ற டிராக்டர் மெக்கானிக் ஆகும். இவர் கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரியில் மது அருந்தி சுற்றி வந்த நிலையில், பணம் இல்லாததால் டிராக்டரை திருடி கொண்டு சென்றதாக உறுதி செய்தார்.தொடர்ந்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.