
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் பிரபு கூறியதாவது: “நாம் தமிழர் கட்சியிலிருந்து நான் மற்றும் என் உடன்படிகளுடன் பலர் அண்மையில் விலகினோம். கட்சியின் வளர்ச்சிக்கு எந்தவொரு முயற்சியும் சீமான் மேற்கொள்ளவில்லை. பலமுறை கட்சியின் வளர்ச்சி தொடர்பாக நிர்வாகிகள் கோரிக்கை வைத்தும் அதை அவர் புறக்கணித்தார், இதனால் பலர் கட்சியில் இருந்து விலகினர். இதோடு, சிலரை வலுக்கட்டாயமாக நீக்கினர்.
எனவே, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய அனைவரும் ஒன்றிணைந்து, தமிழர் வாழ்வுரிமை கட்சியில் இணைந்து செயல்படுவதாக முடிவு செய்தோம். நான்கு மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தற்போது தமிழர் வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளனர்.
சீமான் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பேசி வருகிறார், குறிப்பாக பெரியார் குறித்து அவரது கருத்துக்கள் கட்சியில் உள்ளவர்களுக்கு விரோதமானவை. அவரது பேச்சுக்கு பின்னால் யாரோ இருக்கின்றனர், அது விரைவில் வெளிப்படையாக தெரிய வரும். தமிழ்நாட்டில், தமிழர் வாழ்வுரிமை கட்சி தொடர்பான வளர்ச்சிப் பணிகளில் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என அவர் தெரிவித்தார்.