கோவை தனியார் மருத்துவமனையான கேஎம்சிஹெச்-ன் 29ஆம் ஆண்டு “KMCH கோவை மாரத்தான் – 2025” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வருட மாரத்தான், குழந்தைகள் இருதய நோய் குறித்த விழிப்புணர்வை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. கேஎம்சிஹெச், பல்வேறு வகையான நோய்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் வருடா வருடம் இந்த சிறப்பு மாரத்தான் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தொடர்ந்து 29-வது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி அவர்களின் முன்னிலையில், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஐ.பி.எஸ். அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். கேஎம்சிஹெச் சூலூர் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் துவங்கிய இந்த மாரத்தான், 14 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று, அவினாசி ரோடு கேஎம்சிஹெச் பிரதான மருத்துவ மையத்தில் நிறைவடைந்தது. மொத்த தூரம் 16 கி.மீ. இந்த மாரத்தானில் மருத்துவர்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் உட்பட சுமார் 4000 பேர் கலந்துகொண்டனர்.பின்னர்
செய்தியாளரிடம் பேசிய கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் . கார்த்திகேயன் ஐ.பி.எஸ்., இது போன்ற விழிப்புணர்வு மராத்தான் நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்றும், அது தொடர்ந்து செய்யும் பொழுது சமுதாயத்தில் நோய்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமையும் என்றும் வலியுறுத்தினார். முன்னதாக பேசிய கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி அவர்கள், கோவையில் கேஎம்சிஹெச் சார்பாக முதல் மாரத்தான் 1991-ல் நடைபெற்றது என்றும், இந்த வருட நிகழ்ச்சி குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இருதய நோய்கள் குறித்து முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றும் தெரிவித்தார். விழாவின் நிறைவில் மாரத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
KMCH நடத்தும் கோவை மாரத்தான்
