ஸ்ரீரங்கத்தில் 100 ஆண்டு பாரம்பரியத்துடன் வழுக்கு மரம் ஏறும் உறியடி விழா கொண்டாடப்பட்டது…

திருச்சியின் ஸ்ரீரங்கம் பகுதியில் கிருஷ்ணர் கோவிலில் நடைபெறும் இந்த வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு மிகவும் பிரபலமானது. இவ்விழா கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி, ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள கண்ணன் பஜனை மடத்தில் இந்த உறியடி உற்சவம் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது.

விழாவின் முக்கிய அம்சமாக, 50 அடி உயரத்தில் வழுக்கு மரம் நிறுவப்பட்டு, அதன் உச்சியில் மாலையுடன் சிறிய சில்லறை காசு மூட்டை, சோளம், பழங்கள் போன்றவைகள் கட்டி வைக்கப்படுகின்றன. இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன், ஒருவர் மீது ஒருவர் ஏறி, கயிறைக் கட்டிக் கொண்டு, உச்சி வரை செல்வார்கள். மரத்தில் ஏறவிடாமல் தடுக்கும் பொருட்டு, சுற்றியுள்ளவர்கள் தண்ணீரை பீச்சி அடிப்பது வழக்கம்.

இவ்வாறு, மரத்தில் ஏறி, சிறிய காசு மூட்டையையும் மாலையையும் எடுத்துவந்த இளைஞர், தனது வெற்றியை அனைவருக்கும் காட்டி, அதை பொதுமக்களுக்கு வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வெற்றி பெற்ற இளைஞரை திரளான மக்கள் தோளில் சுமந்து கொண்டாடினர், இது திருச்சியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *