தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!
10வது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டி க்ஷூரடி, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்களில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏரோஸ்கேட்டோபால், 1 நிமிடம் ஸ்கேடிங் ரேஸ், ஸ்கேடிங் ஜிக்ஜாக், ஸ்கேடிங் ஸ்லோ வாக் மற்றும் ஸ்கேடிங் ஹர்டில்ஸ் போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழகத்திலிருந்து 10, 14, 18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவுகளிலும், சீனியர் ஆண்கள், பெண்கள் பிரிவுகளிலும் 90க்கும் மேற்பட்ட ஸ்கேடிங் வீரர்கள், வீராங்கனைகள் போட்டியில் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான், மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்று, தமிழ்நாடு தங்க கோப்பையை வென்று தேசிய அளவில் முதன்மை இடத்தை பிடித்து பெருமையைச் சேர்ந்தது.
இந்த சாதனையை பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் திருச்சியில் இன்று உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். இதில், வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பூங்கொத்துகளுடன் வரவேற்று, அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த வெற்றிக்குப் பின்னால், தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் சங்க தலைவர் ராகேஷ் சுப்ரமணியன், செயலாளர் பிரவீன் ஜான்சன், பொருளாளர் தங்கமுருகன் மற்றும் பயிற்சியாளர்கள் அமல் ஜோயல், வினோத் ஆகியோரை வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.