பெண் கல்விக்கு ஊக்கமளிக்கும் புதிய வெண்கல சிலை!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள ரவுண்டானாவில், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் புதிய வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. புத்தகப்பை சுமந்தபடி, புத்தகங்களின் மீது ஏறி உலக உருண்டையை நோக்கி செல்லும் குழந்தை உருவில் அமைக்கப்பட்ட இந்த சிலை, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த சிறப்பான விழிப்புணர்வு சிலையை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் திறந்து வைத்தார். இதில், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வருவாய் அலுவலர் சர்மிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் இந்த சிலையை உருவாக்கிய அடிசியா நிறுவனத்தின் தலைவர் மணிகண்டன், “பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட இதை நிறுவியுள்ளோம். கல்வியால் மட்டுமே சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும்” என தெரிவித்தார்.

கோவை மாநகரில் அறிவியல் மற்றும் பாரம்பரியத்தை இணைக்கும் விதமாக பல சிறப்பு சிலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பெண் கல்விக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை மைல்கல்லாக அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *