சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக தீபாவளி போனஸ் அறிவிப்பு

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அண்மையில் 3% உயர்த்தப்பட்டது. மேலும், ரேஷன் கடை பணியாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கிய பிறகு, கடந்த 11 ஆண்டுகளில் இதுவரை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது எக்ஸிகியூட்டிவ் பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் என்ற அளவில் போனஸ் தொகை வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிஐடியூ – சென்னை மெட்ரோ ரயில் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இவ்வாண்டு முதல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *