
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு வணிகர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் ‘உறுதுணை’ என்ற குறு மற்றும் நுண் கடன் மானிய நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.மதிவேந்தன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த அவர், பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். அதன் முக்கிய அம்சங்கள்:
மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலமாக குறு, நுண் கடன்கள் வழங்க ரூ.25 கோடி செலவிடப்படும்.
500 தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு.
வணிக வளாகங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க ‘தாட்கோ வணிக வளாக’ திட்டம் ரூ.15 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
பழங்குடியினர் உழவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.14 கோடி மதிப்பில் ஐந்திணை பசுமை பண்ணை திட்டம்.
திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நவீன தொழிற்கூடங்கள் உருவாக்க ரூ.115 கோடி ஒதுக்கீடு.
பழங்குடியின மக்களுக்கு நலம் பெற்ற மருத்துவ சேவைகள் வழங்க ரூ.10 கோடி செலவில் ‘தொல்குடி நல்வாழ்வு’ திட்டம்.
பழங்குடியினர் பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக மேம்படுத்த நடவடிக்கை.
கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ‘அயோத்திதாச பண்டிதர்’ திட்டத்தின் கீழ் 40 அறிவுச்சுடர் மையங்கள் அமைக்க ரூ.40 கோடி ஒதுக்கீடு.
உயர் கல்வி மாணவர்களுக்காக சென்னை, கோவையில் நவீன விடுதிகள் கட்ட ரூ.80 கோடி ஒதுக்கீடு.
இதன் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பணிகள் மேலும் வலுப்பெறும் என அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.