தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட மலையான் தெரு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்று நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதம் இருமுறை மட்டுமே வழங்கப்படும் குடிநீர் மிக குறைந்த நேரம் மட்டுமே கிடைப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனை எதிர்த்து, காலி குடங்களுடன் பெண்கள் பேரணியாக நகராட்சி அலுவலகத்தை நோக்கி வந்தனர். மேலும், தங்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படும் வரை நகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறமாட்டோம் என தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள், நகராட்சி அலுவலகத்தில் அடுப்புகள் மற்றும் பாத்திரங்களை கொண்டு உணவு சமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். “துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, குடிநீர் விநியோகத்தை சரிசெய்ய உத்தரவாதம் அளிக்க வேண்டும்,” என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த போராட்டம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்காசி கவுன்சிலர் சங்கர் கூறியதாவது:
“மக்களின் கோரிக்கையை அதிகாரிகளிடம் எடுத்துச்செல்லும் முயற்சியில் உள்ளோம். விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.குடிநீர் பிரச்சினை தொடர்பான இந்த போராட்டம் தென்காசி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.