Sunday, April 20

தமிழகத்தில் அதிகனமழை: 2229 நிவாரண முகாம்கள் தயார் நிலை..

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 2229 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி, 30.11.2024 அன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின், கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், நிலைமையை தொடர்ந்து கண்காணிக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

ரெட் அலர்ட்
இன்று (29.11.2024):

20 செ.மீட்டருக்கு மேலாக கனமழை: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாருர், நாகப்பட்டினம்.

10 செ.மீட்டருக்கு மேலாக மிககனமழை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர்.

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 6 நிவாரண முகாம்களில் 164 குடும்பங்களைச் சேர்ந்த 471 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும்,

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் தமிழ்நாடு மீட்புப் படையின் 2 குழுக்கள்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு NDRF மற்றும் தமிழ்நாடு மீட்புப் படையின் தலா 1 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க  நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு...

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து, பணி நிலவரம் குறித்து அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கினார்.

மக்கள் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *