
சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக, சட்டவிரோதமாக சோதனை நடத்தப்பட்டது எனக் கூறி, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, “சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது” என அமலாக்கத்துறை விளக்கமளித்தது.
தரப்புகள் அடிப்படையில் அனைத்து வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இன்று (ஏப்ரல் 23) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல. தேச நலனுக்காகவே சோதனை மேற்கொள்ளப்பட்டது” எனக் கூறி, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும், “நள்ளிரவில் சோதனை நடந்தபோது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதை ஏற்க முடியாது” என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்தும் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.