கோவை:அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால், மாணவி பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவத்தை கண்டித்து, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெற்றன. பெண்கள் பாதுகாப்பில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடி நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
கோவையில், கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் தலைமையில் துடியலூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, பி.ஆர்.ஜி. அருண்குமாரை காவல்துறையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரை கைது செய்ய முயன்றபோது, அதிமுக தொண்டர்கள் காவல்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் வாகனத்தை முற்றுகையிட்டு தடுத்தனர், இதனால் சாலை போக்குவரத்து சில நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை அகற்றி, வாகனத்தை நகர்த்தி பி.ஆர்.ஜி. அருண்குமாரை காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரையும் காவல்துறையினர் கைது செய்து, அருகிலுள்ள மண்டபத்தில் தற்காலிகமாக அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடி நீதி கிடைக்க வேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிமுகவினர் வலியுறுத்தினர்.