கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னிந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்றது. இப்போட்டியை மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பந்தயத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் விதவிதமான மோட்டார் சைக்கிள்களுடன் பங்கேற்றனர். 16 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்ற வீரர்களின் வீரியத்தை பார்வையாளர்கள் ரசித்தனர்.
வெற்றி பெறும் வீரர்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் மருத்துவர் மகேந்திரன், சட்டத்திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் அமுத பாரதி, நகர மன்ற துணைத் தலைவர் கௌதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.