Saturday, May 24

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீர்: மூவர் உயிரிழப்பு – திமுக அரசை “கோமா அரசு” என எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது,” என தெரிவித்துள்ளார்.


“கடந்த 15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், ஸ்டாலின் மாடல் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன,” என பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.


“மக்களுக்கு சுகாதாரமான குடிநீரைக் கூட வழங்க முடியாத அரசை எதற்காக வைத்திருக்கிறோம்? முதல் நாள் முதல் அரசு இயங்குகிறதா என்றே சந்தேகம். தேர்தலுக்கு முன் மனுக்களை பெட்டியில் போட்டு வைத்ததையும், ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்போவதாகக் கூறியதையும் நினைவுபடுத்தி, இதுவரை எந்த மனுவும் நிறைவேற்றப்படவில்லை” என அவர் விமர்சித்துள்ளார்.


“மக்களின் குறைகளை கேட்காத, அவற்றை நிறைவேற்றாத திமுக அரசு ஒரு கோமா அரசு” என்று அவர் கடுமையாக விமர்சித்து, “உயிரிழப்புகளுக்கு திமுக அரசு உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் குடிநீர் சுகாதார முறையில் வழங்கப்பட வேண்டும்” என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க  அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன்: இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *