Friday, May 23

கோவையில் 2 நாள் மாநாடு – விஜய் பங்கேற்பு

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சி, 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி தயாராகி வருகிறது. தற்போது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தேர்தலில் வெற்றியை தீர்மானிக்க வாக்குச்சாவடி முகவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதால், அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விஜய் பங்கேற்கும் மாநாடுகள் நடைபெற உள்ளன.

இந்தக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் நிலையில், முதல் மாநாடு கோவையில் ஏப்ரல் 26ம் தேதி (நாளை) தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரி அரங்கில் நடைபெறும் இம்மாநாட்டில் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர்.

மாநாடு தினமும் மாலை 3 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும். இதில் நடிகர் விஜய் நேரில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். அவருடன் முகவர்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதால் மற்ற தொண்டர்களுக்கு விஜயை நேரில் காணும் வாய்ப்பு இல்லை.

நாளை காலை 11 மணிக்கு விஜய் விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவைக்கு வருகிறார். விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் அவரை உற்சாகமாக வரவேற்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். கட்சி தொடங்கிய பிறகு விஜய் கோவைக்கு முதல் முறையாக வருவதால், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் திரள விருப்பதாக கூறப்படுகிறது.

விமான நிலைய வரவேற்புக்குப் பிறகு, விஜய் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். பின்னர் மாநாடு நடைபெறும் எஸ்என்எஸ் கல்லூரிக்கு சென்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு உரையாற்றுகிறார். மறுநாள் காலை கோங்கு மண்டலத்தின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்கிறார். மாலை இரண்டாவது நாளின் மாநாட்டிலும் பங்கேற்ற பிறகு, அன்று இரவே விஜய் சென்னை திரும்புகிறார்.

மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் மேற்பார்வை பார்த்து மேற்கொண்டு வருகிறார். கடந்த 3 நாட்களாக கோவையில் முகாமிட்டு பணிகளை ஒருங்கிணைத்துவரும் அவர், இன்று மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்று இறுதிப் பணிகளை விரைவுபடுத்தினார்.

இதையும் படிக்க  சங்கனூரில் பிரம்மரிஷி விசுவாமித்திரர் குருபூஜை விழா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *