இந்திய அஞ்சல் துறை, டிசம்பர் 18 முதல் நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்தியுள்ளது. இதனால் புத்தக ஆர்வலர்கள், பதிப்பகங்கள், மற்றும் வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்க விரும்பும் சமூகங்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
அஞ்சல் துறையின் நூல் அஞ்சல் சேவை, ஐந்து கிலோ புத்தகங்களை வெறும் ₹80 விலைக்கே அனுப்பும் வசதி வழங்கியது. இதனால் கல்வி மற்றும் வாசிப்பு பரவலுக்கு முக்கிய பங்கு ஆற்றியது. இச்சேவை தற்போது விவாதமின்றி நிறுத்தப்பட்டுள்ளது.
விலை உயர்வு:
நூல் அஞ்சலின் விலை ₹32-₹80 என இருக்க,
தற்போது ₹78-₹229 வரை உயர்ந்துள்ளது.
இரண்டு கிலோ பார்சலுக்கு ₹45-₹116,
ஐந்து கிலோ பார்சலுக்கு ₹80-₹229 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் மாதிரி புத்தகங்களுக்கும் (Sample Copies) தற்போது 5% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தக வர்த்தகத்தில் அதிக செலவினங்கள் ஏற்பட்டுள்ளன.
பதிப்பகங்கள் மற்றும் வாசகர்கள் இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
₹100 விலையுள்ள புத்தகத்திற்கு ₹78 அஞ்சல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது வாசகர்களை தயங்க வைக்கிறது.
இதனால் இந்தியாவில் ஏற்கெனவே குறைந்து வரும் வாசிப்பு கலாச்சாரம் மேலும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அச்சு நூல்களைக் கொண்டுவரும் சிறு மற்றும் நடுத்தர பதிப்பகங்கள் அதிக அளவிலான நஷ்டத்தை எதிர்கொள்கின்றன. இந்த முடிவு, நாட்டின் கல்வி, அறிவு வளர்ச்சி ஆகியவற்றிற்கும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்திய அஞ்சல் துறை, இச்சேவையை மறுபரிசீலனை செய்யும் படி வாசகர்கள் மற்றும் பதிப்பகங்கள் வலியுறுத்துகின்றன.